logo
தார்சாலை பணிக்காக 3  நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை

தார்சாலை பணிக்காக 3 நாட்களுக்கு ஈரோடு வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு விடுமுறை

07/Oct/2020 10:39:36

ஈரோடு: தார்ச்சாலை அமைக்கும் பணிகளுக்காக ஈரோடு வ.உ.சி. பூங்கா காய்கனி சந்தைக்கு 3 நாட்கள் அடைக்கப்படுமென மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஈரோடு ஆர்.கே.வி. சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி காய்கனி மார்க்கெட் ஈரோடு பேருந்து நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டது.பின்னர், வ.உ.சி பூங்காவில் ரூ.1 கோடி மதிப்பில் தற்காலிக மார்க்கெட் அமைக்கப்பட்டது. இதில், 700-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இங்கு இரவு முழுவதும் மொத்த வியாபாரமும். காலை 12 மணி வரை சில்லரை வியாபாரமும் நடைபெற்று வருகிறது.தினமும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பொதுமக்கள் வந்து செல்வதால் காய்கனி மார்க்கெட் எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

ஆனால், மழைக் காலங்களில் காய்கனி மார்க்கெட் பகுதி சேறும் சகதியுமாக மாறி வருவது தொடர் கதையாகி வருகிறது. இதனால் பொது மக்கள் வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். சந்தையின் தரைப்பகுதியில் கான்கிரீட் போட வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து வ.உ.சி. பூங்கா தற்காலிக சந்தையில் தார்ச்சாலை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை சந்தைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு மேடுபள்ளம் சீரமைக்கப்பட்டு  சிமெண்ட் ஜல்லிக் கலவை கொட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை (3 நாட்கள்) காய்கனி மார்க்கெட்டுக்கு தார்சாலை அமைக்கும் பணிக்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து,  ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியது:ஈரோடு வ.உ. சி. பூங்கா பகுதியில் தற்காலிக சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு  மழைக் காலங்களில் மார்க்கெட் பகுதிக்குள் தண்ணீர் புகுந்து சேரும் சகதியுமாக காட்சி அளிப்பதால் பொதுமக்கள் வியாபாரிகள் தார்ச்சாலை அமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

அதனை ஏற்று ரூ. 25 லட்சம் மதிப்பில் மார்க்கெட் பகுதியில் தார்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.அதன்படி கடந்த வெள்ளிக்கிழமை மேடான பகுதியில் சிமெண்ட் ஜல்லி கலவை கொட்டப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று முதல் வரும் வெள்ளிக்கிழமை வரை 3 நாட்களுக்கு தார்ச் சாலை அமைக்கும் பணி நடைபெறும் காரணத்தால் சந்தைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றார். 


Top