07/Oct/2020 10:09:35
புதுக்கோட்டை: பட்டியலினப் பிரிவில் இடம்பெற்றுள்ள குடும்பர், காலாடி, பண்ணாடி, தேவேந்திர குலத்தார், கடையர், பள்ளர் என்ற ஆறு உட்பிரிவுகளையும் ஒன்றிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை பிறப்பிக்கவும், அந்த மக்களைப் பட்டியல் பிரிவிலிருந்து வெளியேற்றவும் வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய தமிழகம் கட்சியினர் தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை அறிவித்திருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை, குழிபிறை,கீரனூர் உட்பட மாவட்டத்தின் 10 இடங்களில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை திலகர் திடலில் தடையை மீறி புதிய தமிழகம் கட்சியினர் ஊர்வலமாக வந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.அப்போது ஏற்கனவே மத்திய மாநில அரசுகள் கொடுத்த வாக்குறுதியின்படி தேவேந்திரகுல வேளாளர் உள்ளிட்ட 6 பிரிவு மக்களை பட்டியலின சமூகம் என்ற பட்டியலில் இருந்து நீக்கி விட்டு தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பிரிவாக அறிவிக்கக் கோரி முழக்கமிட்டனர். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகர் டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.