logo
செப்-1-இல் பள்ளிகள் திறப்பு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

செப்-1-இல் பள்ளிகள் திறப்பு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரம்

25/Aug/2021 07:02:56

ஈரோடு, ஆக: செப்-1-இல் பள்ளிகள் திறப்பு: ஈரோடு மாவட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

 தமிழகத்தில் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. எனினும் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு தொலைக்காட்சி, ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்களும் ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்று வருகின்றனர்.

ஏறத்தாழ இரண்டு வருடமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.  தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து தமிழக அரசு வரும் செப்டம்பர். 1 -ஆம் தேதி முதல் 9 -ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதற்காக பள்ளிகள் திறப்பது குறித்து அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.  கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. சுழற்சி முறையில் மாணவர்களுக்கு பாடம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொற்று பரவ ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்தந்த பள்ளிகள் இதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. நீண்ட இடைவெளிக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுவதால் வகுப்பறைகள் குடிநீர் தொட்டிகள் கழிப்பிடம் போன்றவை தூய்மைப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. முதன்மை கல்வி அதிகாரிகள் இதற்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தினார்கள். தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தற்போது துப்புரவு பணியாளர்களை கொண்டு பள்ளிகளை சீரமைக்கும் பணியில் தலைமையாசிரியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணி நடந்து வருகிறது. நீண்ட காலமாக பயன்படுத்தப்படாமல் இருந்த குடிநீர் தொட்டிகள் கிருமிநாசினி மூலம் சுத்தப் படுத்தப்பட்டன. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து உட்காரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. 

கிருமி நாசினியாக பயன்படும் வகையில் வகுப்பறையின் நுழைவாயிலில் வைக்கப்படுகிறது. மாணவ மாணவிகளுக்கு முககவசம் இலவசமாக வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுத்திகரிக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீர் வழங்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.  இதுதவிர மாணவர்களுக்கு எதிர்ப்பு சக்தி மற்றும் வைட்டமின் மாத்திரைகளும் வழங்க சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

மாணவர்கள் குழுவாக கூடி உணவு அருந்துவதை தவிர்த்தல், வளாகங்களில் கூடி நின்று பேசுதல் போன்றவற்றை தவிர்க்க கண்காணிப்பு பணியில் ஆசிரியர்கள் ஈடுபடவேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்தில் தேவையற்ற குப்பைகள் முட்புதர்கள் மரக்கிளைகள் ஆகியவை அகற்றப்பட்டு வருகின்றன. நீண்ட நாட்களாக வகுப்பறைகள் மூடப் பட்டிருப்பதால் வகுப்பறையை  சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. 

 இதுபோல் கல்லூரிகளில் உள்ள வளாகத்திலும் தூய்மைப்படுத்தும் பணி தீவரமாக நடந்து வருகிறது. மேலும் பள்ளி வாகனங்கள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டு வருகிறது. இதற்காக மெக்கானிக் கடையில் பள்ளி வாகனங்கள் விடப்பட்டு சரி பார்க்கப்பட்டு வருகிறது.

Top