24/Aug/2021 09:46:28
ஈரோடு ஆக: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சட்ட விரோதமாக தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பணிக்கம்பாளையம் கேஸ் கிடங்கு அருகில் ஒரு வீட்டில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக பெருந்துறை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற காவல்துறையினர், அங்கு தங்கியிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், முஜாம்மண்டல், இபாதுல் அலி என்பதும், இருவரும் வங்காள தேசம், நார்த் பர்கானஸ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது.
மேலும், பாஸ்போர்ட், விசா போன்ற உரிய ஆவணங்கள் இல்லாமல் வங்காள தேசத்தில் இருந்து, இந்தியாவின் மேற்கு வங்கம் மாநிலத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து, அங்கிருந்து ரயில் மூலம் பெருந்துறை வந்து தங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து 2 பேர் மீதும் வெளிநாட்டவர் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்கள், இருவரையும் கைது செய்தனர். மேலும், இவர்களுடன் தங்கியிருந்த ஜஹங்கர்,ஆதாஸ் ஆகிய இரண்டு பேரை தேடி வருகின்றனர்.