logo
ஈரோடு அருகே தடையை மீறி மது அருந்த அனுமதித்த பஞ்சாபி ஓட்டலுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்

ஈரோடு அருகே தடையை மீறி மது அருந்த அனுமதித்த பஞ்சாபி ஓட்டலுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்து சீல் வைத்தனர்

22/Aug/2021 11:42:56

ஈரோடு, ஆக: ஈரோடு மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மாவட்டத்தில் தற்போது, கொரோனா தொற்று மீண்டும் படிப்படியாக உயர துவங்கி இருப்பதால், கொரோனா தடுப்பு பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரம் காட்டி உள்ளது.

அதேசமயம் மக்களை தொற்றில் இருந்து பாதுகாக்க கொரோனா தடுப்பூசி போடும் பணியும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டத்தில் புதிய கட்டுப்பாடுகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்தார்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகை கடைகள், காய்கறி கடைகள், பேக்கரிகள் உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் உணவகங்கள், டீக்கடைகளுக்கும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாக 24 இடங்கள் கண்டறியப்பட்டு அப்பகுதிகளில் மட்டும் சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் அத்தியாவசிய கடைகளை தவிர மற்ற கடைகள் முழு நேரமும் அடைக்க உத்தரவிடபட்டுள்ளது. இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள  டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பார்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 

இந்நிலையில் ஈரோடு அடுத்துள்ள சித்தோடு தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பஞ்சாபி ஓட்டலில் தடையை மீறி வாடிக்கையாளர்களை மது அருந்த அனுமதியளித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்து வந்த வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் ஓட்டலுக்கு சீல் வைத்து அபராதம் விதித்தனர். மேலும் வரும் காலங்களில் தடையை மீறி மது அருந்த அனுமதித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Top