logo
பொற்பனைக்கோட்டை அகழாய்வு:  செங்கல் கட்டுமான நீர்த்தட கால்வாய் அமைப்பு  கண்டறியப்பட்டுள்ளது

பொற்பனைக்கோட்டை அகழாய்வு: செங்கல் கட்டுமான நீர்த்தட கால்வாய் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது

19/Aug/2021 11:16:42

புதுக்கோட்டை, ஆக: தமிழகத்திலேயே தற்போது ஓரளவு முழுமையான நிலையில் இருக்கும் ஒரே சங்ககால கோட்டையான பொற்பனைக்கோட்டை யில் பல்வேறு தொல்லியல் தடயங்கள் கிடைத்து வந்தது. இந்த அகழ்வாய்வு பதிவுகள் மிகவும் நேர்த்தியாக மேற்கொள்ளப்பட்டதாக இந்திய தொல்லியலாளர்கள் கருதுகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாக  செங்களூரில் இந்திய தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்டது. இதில் இரும்புக்கால பண்பாட்டுச் சின்னங்கள் கிடைத்தன. புதுக்கோட்டை மாவட்டத்தைப் பொருத்தவரையில் இதுவரையில் வாழ்விடப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை.

2005 -ஆம் ஆண்டில்  குடவாயில் பாலசுப்பிரமணியம் மேற்கொண்ட மேற்பரப்பு ஆய்வின் மூலமாக சங்ககால செங்கல் மற்றும் பானை ஓடுகள் இருப்பதை உலகிற்கு வெளிப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து 2013 -ஆம் ஆண்டு தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கடல் சார் தொல்லியல் துறை பேராசிரியர்  சு. ராஜவேலு மற்றும் தமிழ் பல்கலைக்கழக அந்நாளைய மாணவர்கள் தங்கதுரை, பாண்டியன் ஆகியோரால் கி.பி இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்த தமிழிக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது.

2014 ஆம் ஆண்டு முதல்புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் ஆ.மணிகண்டன் கரு.ராசேந்திரன்  உள்ளிட்ட குழுவினர் பொற்பனைக்கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக மேலாய்வு செய்ததைத் தொடர்ந்து இரும்பு உருக்கு தொழிற்சாலை இரும்பு உருக்கு கழிவுகள் சுடுமண் குழாய்கள், உருக்கு கலன்கள் உள்ளிட்டவை அடையாளம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கோட்டையின் மேற்பரப்பில் இருக்கும் கட்டுமானங்களில் கொத்தளங்கள் உள்ளிட்டவை இருப்பதையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு  கழகத்தினர் கண்டுபிடித்த  நிலையில் ,  அகழ்வாய்வு தொடங்கிய பிறகு  சுடுமண் கூரை ஓடுகள்,மணிகள், இரும்பு கருவிகள் இருப்பதை கண்டறிந்து அகழ்வாய்வு இயக்குனர் பேரா.இனியனிடம் புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வு கழகத்தினரால்  ஒப்படைக்கப்பட்டது.


இந்நிலையில், பொற்பனைக்கோட்டை அகழ்வாய்வு 13 நாட்களாக தமிழ்நாடு பல்கலைக்கழக பேராசிரியர் இனியன் தலைமையிலான அகழ்வாய்வு குழுவினர் மூலம் நீர் செல்வதற்காக அமைக்கப்பட்ட செங்கல் கட்டுமான நீர்த்தட கால்வாய் அமைப்பு அகழ்வாய்வு குழியில் வெளிப்பட்டு இருப்பது வெளிக்கொணரபட்டுள்ளது.

புதுக்கோட்டையில் இதுவரை நடந்துள்ள அகழ்வாய்வுகளில் வாழ்விடம் சார்ந்த ஒரே கட்டுமானமாக பொற்பனைக்கோட்டை இருப்பதை இந்த கட்டுமான அமைப்பு உறுதி செய்கிறது. அதுமட்டுமின்றி நகர நாகரீகத்திற்கான முக்கிய குறியீடாக தொல்லியல் துறையினரால் பார்க்கப்படும் கால்வாய் அமைப்பு கிடைத்திருப்பது, பொற்பனைக்கோட்டையின் மீது சிறப்பு கவனத்தை திருப்பியுள்ளது.

கீழடி உள்ளிட்ட ஒரு சில பகுதிகள் மட்டுமே இதுவரை அகழ்வாய்வு செய்யப்பட்டிருக்கும் நிலையில் கோட்டை மற்றும் அதுசார்ந்த வாழ்விடம் குறித்த எவ்வித ஆய்வுகளும் குறிப்பிடத்தக்க வகையில் மேற்கொள்ளப்படவில்லை குறிப்பாக தஞ்சாவூர் வல்லம் பகுதியில் இருந்த சங்க காலக் கோட்டை முழுவதுமாக சிதைந்து விட்ட நிலையில் சங்ககால பாடல்களில் கூறப்பட்ட அனைத்து அவயங்களும் கொண்ட ஒரே கோட்டையாக பொற்பனைக்கோட்டை இருப்பது இந்த அகழ்வாய்வின் முதல் கட்டத்திலேயே வெளிப்பட்டிருக்கிறது.

தற்போது அகழ்வாய்வு செய்யப்படும் இடத்திற்கு மேற்குப் புறத்தில் அமைந்திருக்கும் அரண்மனை மேட்டுப் பகுதியில் மிக முக்கியமான கட்டுமானங்கள் இருக்கும் வாய்ப்புள்ளது. தமிழர்களின் நிர்வாக அமைப்பை வெளிப்படுத்தும் பல்வேறு இலக்கியச் சான்றுகள் இருந்த போதியிலும் அதனை உறுதிப்படுத்தும் ஒரு இடமாக பொற்பனைக்கோட்டை அமைந்துள்ளது.

தொடர் ஆய்வுகள் மூலம்  முக்கிய கட்டுமானங்கள் பழங்கால பொருட்கள் ஆயுதங்கள் இன்னும் பிற முக்கிய தொல்பொருட்கள் கிடைக்கும் என நம்பலாம் என தொல்லியல்துறை ஆய்வு முனைவர் பட்ட மாணவர் மணிகண்டன் தெரிவித்தார்.


Top