logo
ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 700 பேருக்கு  அபராதம்

ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 700 பேருக்கு அபராதம்

02/Aug/2021 08:38:14

ஈரோடு,  ஆக: ஈரோடு மாநகர் பகுதியில் ஒரே நாளில் ஹெல்மெட் அணியாமல் வந்த 700 பேருக்கு  போலீஸார் அபராதம் விதித்தனர். 

ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இரு சக்கர நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் முக்கியமான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவ்வப்போது சாலை விபத்துக்களும் ஏற்பட்டு உயிரிழப்பும் ஏற்படுகிறது. 

பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தில் இருந்து வருபவர்கள் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் சிக்கி உயிரிழப்பு ஏற்படுகிறது. இதையடுத்து இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு போலீசார் தலா ரூ.100 அபராதம் விதித்து வந்தனர்.  இதையடுத்து ஹெல்மெட் அணியும் பழக்கம் அதிகரித்தது. 

இந்நிலையில், சமீபகாலமாக ஈரோடு மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து. இதையடுத்து மாவட்ட எஸ்பி  சசிமோகன் ஹெல்மெட் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து டவுன் டிஎஸ்பி ராஜு மேற்பார்வையில் ஈரோடு மாநகரம் முழுவதும் அந்தந்த இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் ஹெல்மெட் அணியாமல் வந்த  இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே நாளில் மாநகர் பகுதியில் மட்டும் ஹெல்மெட் அணியாமல் வந்த 700 பேருக்கு தலா ரூ .100 அபராதம் விதிக்கப்பட்டது.

இதைப்போல் மாவட்டம் முழுவதும் போலீசார் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதைப்போல ஞாயிற்றுக்கிழமையும் ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கும்  நடவடிக்கை தொடர்ந்தது.

Top