logo
புதுக்கோட்டை அருகே 100 ஏக்கரில் ரூ.56 கோடியில் துணைக்கோள் நகரம்: கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்படுமா ?

புதுக்கோட்டை அருகே 100 ஏக்கரில் ரூ.56 கோடியில் துணைக்கோள் நகரம்: கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்படுமா ?

17/Jul/2021 06:48:57


புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், முள்ளூரில்  தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில்  கடந்த பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட  துணைக் கோள் நகரத்தின்(Satellite city) கட்டுமானப்பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். 


புதுக்கோட்டையில் சில ஆண்டுகளுக்குமுன்னர் நடைபெற்ற  மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவில் முள்ளூர்  கிராமத்தில் புதிய துணைக் கோள் நகரம் அமைக்கப்படும் என அப்போதிருந்த முதல்வர்   அறிவித்தார். 

அதனடிப்படையில்.   நடப்பாண்டில் பிப்ரவரி மாதம் முள்ளூர் கிராமத்தில் புதிய துணைக் கோள் நகரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த துணைக் கோள் நகரம் 100 ஏக்கர் பரப்பளவில் ரூ.56.31 கோடி மதிப்பீட்டில் 1,603 வீட்டுமனைகளுடன் பிரமாண்டமாக அமைக்கப்பட உள்ளது.

மேலும், இத்துணைக் கோள் நகரம்புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அருகிலும், புதுக்கோட்டை பேருந்து நிலையம், புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து 5 கி.மீ. தூரத்திலும், புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவி்லும்  தஞ்சாவூர்-மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருச்சி-காரைக்குடி சுற்றுச் சாலைகளுக்கு இடையில் அமைந்துள்ள மனைப் பிரிவாகும்.

இதில், உயர் வருவாய் பிரிவில் 339 மனைகள் ஒவ்வொன்றும் தலா 2,711 சதுரஅடி பரப்பளவிலும், மத்திய வருவாய் பிரிவில் 280 மனைகள் தலா 2,325 சதுரஅடி பரப்பளவிலும், குறைந்த வருவாய் பிரிவில் 218 மனைகள் தலா 1,453 சதுரஅடி பரப்பளவிலும், பொருளாதாரத்தில் நலிவுற்றப் பிரிவில் 766 மனைகள் தலா 431 சதுரஅடி பரப்பளவிலும் என மொத்தம் 1,603 வீட்டு மனைகள் அமைக்கப்பட உள்ளன. 


இந்த துணைக் கோள் நகரத்தில் மழைநீர் வடிகால் அமைப்பு, 80 அடி, 60 அடி மற்றும் 40 அடி அகல தார்ச்சாலைகள், ஒவ்வொரு மனைக்கும் குடிநீர் இணைப்பு மற்றும் தெருவிளக்கு வசதி, பள்ளி மனை, வணிக மனைகள், பொது உபயோக மனை மற்றும் பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு நவீன வசதிகளுடன் கூடிய மனைப் பிரிவாக  அமைக்கப்பட உள்ளது. 

எனவே பல்வேறு நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள துணைக் கோள் நகரில் 6 மாதங்களுக்கு  முன்னர் தொடங்கப்பட்ட பணிகள் மெதுவாக நடந்து வருகின்றன. அறிவிப்பு பலகையும் அருகேயுள்ள சுற்றுச்சுவரும் மட்டுமே பளிச் என்று தெரிகின்றன.

எனவே, அனைத்துப் பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு  இந்த நகரைக் கொண்டுவர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு புதுக்கோட்டையைச் சேர்ந்த 2 அமைச்சர்களும்   அறிவுறுத்த வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Top