logo
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி  முதல்நாளில் பவானி  கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத் தடை

கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி முதல்நாளில் பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் புனித நீராடத் தடை

17/Jul/2021 04:39:11

ஈரோடு, ஜூலை: கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆடி மாதப்பிறப்பையொட்டி ஈரோடு பவானி  கூடுதுறை காவிரி ஆற்றில் பக்தர்கள் புனித நீராடத் தடை விதிக்கப்பட்டது.

தமிழகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த  பரிகாரத் தலங்களில் பவானி கூடுதுறையும் ஒன்று.  பவானி, காவிரி மற்றும் கண்ணுக்குப் புலப்படாத அமிர்த நதி என்ற மூன்று நதிகளும் கூடும் இடமான திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் கூடுதுறையில், பவானி சங்கமேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

இங்கு ஆண்டுதோறும் ஆடி 1-ஆம் தேதி காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடி செல்வார்கள். மேலும் புதுமணத்தம்பதியர் அருகம்புல் வைத்து நீராடுவதோடு தங்களின் திருமண மாலைகளை பூஜித்து காவிரியில் விட்டுச்செல்வார்கள். ஈரோடு மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்வார்கள். குறிப்பாக ஆடி மாதத்தில் பவானி சங்கமேஸ்வர் கோவிலில் வழக்கத்தை விட அதிக மக்கள் கூடுவார்கள்.

 தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய 144 தடை உத்தரவு தொடர்ந்து அமலில் உள்ளது. அதன்படி கோவில்களில் மக்கள் கூட்டம் அதிகமானால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படும். பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாமல் கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

இதன் காரணமாக ஆடி பிறப்பான சனிக்கிழமை காவிரியில் புனித நீராடுதல் போன்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் முககவசம் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Top