logo
 புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மறைந்த சான்றோர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது

புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் மறைந்த சான்றோர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் நடத்தப்பட்டது

15/Jul/2021 12:22:12

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் அண்மையில் புதுக்கோட்டையில் மறைந்த சான்றோர்களுக்கு நினைவஞ்சலி கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

புதுக்கோட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க அரங்கில் நடைபெற்ற நினைவேந்தல் கூட்டத்துக்கு புதுக்கோட்டை மாவட்ட வர்த்தகர் சங்க கௌரவ தலைவர் சீனு. சின்னப்பா தலைமை வகித்தார்.

அண்மையில் மறைந்த ஓய்வுபெற்ற பதிவுத்துறை உதவித் தலைவர் ரெ.ராமையா, மூத்த வழக்குரைஞர்  இ.ஆர்.எம்.ராமலிங்கம், தேசியக் கவிஞர் வி.கே. கஸ்தூரிநாதன், நட்புறவுக் கழகத் தலைவர் ஆர்.முத்துசாமி, மிருதங்க வித்வான் ராஜா, கவி ராஜன் அறக்கட்டளை தலைவர் புலவர் கண்ணன், சொல்லின் செல்வர் சோ.சத்தியசீலன் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையொட்டி,  மறைந்த ரெ.ராமையா எழுதிய  மன்னர்களின் ஆட்சியில் புதுக்கோட்டை,  மலரும் சில நினைவுகள் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. 

இந்நிகழ்வில், ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி, திருக்குறள் கழகம் க.ராமையா, மருத்துவர் எஸ்.ராம்தாஸ், மருத்துவர் கேஎச்.சலீம்,  திலகவதியார் திருவருள் ஆதீனம் தவத்திரு தயானந்த சந்திரசேகரன் வர்த்தக சங்க முன்னாள் தலைவர் ஆர். சேவியர்,  எஸ்.ஆரோக்கியசாமி, பேராசிரியர் பொ.அண்ணாமலை, கவிஞர் நா.முத்துநிலவன், கவிஞர் தங்கம்மூர்த்தி.

கவிஞர் முருகபாரதி, கம்பன் கழக இணைச்செயலர் பாரதி பாபு, ராமையாவுடன் பணியாற்றிய ராஜேந்திர சிங், வழக்கறிஞர் திருமூர்த்தி, பழனியப்பா கண்ணன், பொறியாளர் வி.இறையன்பு  மற்றும் ராமையா  குடும்பத்தினர் கலந்துகொண்டு மறைந்த சான்றோர்களின் பெருமைகளை நினைவு கூர்ந்தனர்.  மறைந்த சான்றோர்களின்  நினைவாக தென்னை மரக்கன்று நடப்பட்டது.   ஏற்பாடுகளை வாசகர் பேரவை செயலர் சா.விஸ்வநாதன் செய்திருந்தார்.

Top