logo
  திருமயம் தொகுதியில் புதுப்பட்டி, கடியாப்பட்டியில் அதிக திறன் கொண்ட  110/KV  புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

திருமயம் தொகுதியில் புதுப்பட்டி, கடியாப்பட்டியில் அதிக திறன் கொண்ட 110/KV புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

14/Jul/2021 10:47:21

புதுக்கோட்டை, ஜூலை: புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், தல்லாம்பட்டி துணை மின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட தேனிப்பட்டி பிரிவு அலுவலகம் மற்றும் திருமயம் துணை மின் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட திருமயம் பிரிவு அலுவலகத்தை  சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர்  எஸ்.ரகுபதி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை  முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தல்லாம்பட்டி துணை மின் நிலையத்தில் ரூ.28.5 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தேனிப்பட்டி பிரிவு அலுவலகம் மற்றும் திருமயம் துணை மின் நிலையத்தில் ரூ.29 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட திருமயம் பிரிவு அலுவலகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தேனிப்பட்டி பிரிவு அலுவலகத்தில்  209 மின்மாற்றிகளும், பல வேறுபட்ட 12,601 மின் இணைப்புகளும் உள்ளன. இப்பிரிவுக்கு உட்பட்ட தல்லாம்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து தேனிப்பட்டி, கே.புதுப்பட்டி, வம்பரம்பட்டி, வாளரமாணிக்கம், கரையப்பட்டி, கும்மங்குடி, கீரணிப்பட்டி, துறையூர், வடகாட்டுப்பட்டி, மீனிகந்தா, ரெகுநாதபுரம் மற்றும் மேல்நிலைப்பட்டி ஆகிய கிராமங்கள் தடையில்லா மின்சார வசதி பெருவதுடன் துணை மின் நிலைய வளாகத்தில் இவ்வலுவலகம் அமைந்துள்ளதால் பராமரிப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்ள வாய்ப்பாக அமையும்.

திருமயம் பிரிவு அலுவலகத்தில் 161 மின்மாற்றிகளும், பல வேறுபட்ட 17,565 மின் இணைப்புகளும் உள்ளன. மேலும் திருமயம் துணை மின் நிலையத்திலிருந்து திருமயம், மனவாளங்கரை, இளஞ்சாவூர், ஆர்.சி.புரம், கண்ணங்காரக்குடி, ஊனையூர், கோனாப்பட்டு, துளையானுர், வாரிப்பட்டி, இராங்கியம், கண்ணனூர், மேலூர், அம்மன்பட்டி, அரசம்பட்டி, விராச்சிலை மற்றும் வி.லெட்சுமிபுரம் ஆகிய கிராமங்களுக்கு சீரான தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.

தல்லாம்பட்டி துணை மின் நிலையம் முன்னாள் முதல்வர் கலைஞரால்  கொண்டு வரப்பட்டதாகும். மேலும், நல்லம்மாள்சத்திரம் பகுதியில் புதிய துணை மின் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், புதுப்பட்டி மற்றும் கடியாப்பட்டியில் அதிக திறன் கொண்ட 110 கே.வி  புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இத்தகைய மின்திட்டங்கள் ஓரிரு ஆண்டுகளில் பயன்பாட்டிற்கு வரும் பொழுது இப்பகுதியிலிருந்து மாவட்டத்தின் பிறபகுதிகளுக்கு மின் விநியோகம் வழங்கும் நிலை உருவாகும். பொதுமக்களின் கோரிக்கைகேற்ப பழுதடைந்த மின்மாற்றிகளை சீரமைக்கவும், தேவைப்படும் இடங்களில் புதிய மின்மாற்றிகள் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்..  விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கவும், விவசாயிகளுக்கென தனிபட்ஜெட் போன்ற தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதன் மூலம்  விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக  திகழ்கிறது என்றார் சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி.

இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மேற்பார்வை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் ஆனந்தாயி, அரிமளம் ஒன்றியக் குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன் ராமலிங்கம், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு(எ)சிதம்பரம் உள்ளிட்டோர்  கலந்து கொண்டனர்.  


Top