logo
கையிருப்பு இல்லாததால்  இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா  தடுப்பூசி முகாம்கள் ரத்து

கையிருப்பு இல்லாததால் இன்று ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம்கள் ரத்து

10/Jul/2021 01:38:17

ஈரோடு, ஜூலை:   ஈரோட்டில் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 62 ஆயிரம் பொது மக்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். தடுப்பூசி போடும் முகாம்களில் இரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். இன்னும் சிலர் இரவிலேயே வந்து இடம் பிடித்து காத்து நிற்கின்றனர்.

இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற்காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.

அதன்படி ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போடப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது. தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் கடந்த 4-ஆம் தேதி முதல் ஈரோடு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் கோவிஷில்டு தடுப்பூசி இரண்டாம் டோஸ் மட்டும் 1,600 பேருக்கு செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று ஈரோடு மாவட்டத்தில் உள்ள 17 மையங்களில் கொரோனா தடுப்பூசியான கோவிஷில்டு, கோவேக்சின் 2 -ஆம் டோஸ் மட்டும் பொதுமக்கள் 3, 950 பேருக்கு செலுத்தப்பட்டது. 

அதே நேரத்தில் 5 நாட்களாகியும் கொரோனா தடுப்பூசி முதல் டோஸ்  பொதுமக்களுக்கு செலுத்தப்படவில்லை.இந்நிலையில் இன்று தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதும் தடுப்பூசி போடும் போதும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தடுப்பூசி வருவதைப் பொறுத்து மீண்டும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.

Top