28/Jun/2021 06:58:30
புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு செய்து விவசாயிகள் பயன் பெறலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கவிதா
ராமு வெளியிட்ட தகவல்: தேசிய கால்நடை இயக்கம் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21 -ஆம் ஆண்டில் கால்நடை பராமரிப்புத்துறை
மூலம் 6,300 கால்நடைகளுக்கு மானியத்துடன் காப்பீடு மேற்கொள்ள
இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் காப்பீடு மேற்கொள்ள 2 சதவிகித
பிரிமியத் தொகையில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள
கால்நடை வளர்ப்போருக்கு
70 சதவீதம் மானியமும், வறுமைக் கோட்டிற்கு மேல்
உள்ளவர்களுக்கு 50 சதவீதம்
மானியமும்
வழங்கப்படும்.
இரண்டரை ஆண்டு முதல் 8 ஆண்டு வயதுள்ள கறவை மாடுகள், எருமைகள் மற்றும் 1 ஆண்டு முதல் 3 ஆண்டு வயதுள்ள வெள்ளாடுகள், செம்மறியாடுகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும். அதிகபட்சமாக ரூ.35,000 -க்கு மேல் காப்பீடு செய்யப்படும் கால்நடைகளுக்கு அதிகப்படியான மதிப்பிற்கான காப்பீட்டு கட்டணத்தை கால்நடை உரிமையாளரே செலுத்த வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கு இத்திட்டத்தில் காப்பீடு செய்யலாம். ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகத்தை அணுகி பயன்பெறலாம்.