30/Sep/2020 10:47:07
ஈரோடு மாவட்ட காவல்கண்காணிப்பாளர் .அலுவலகத்தில் பாரதிய ஜனதா விவசாயப் அணி சார்பில் மாவட்ட விவசாய அணி தலைவர் சண்முகசுந்தரம் தலைமையில் திரண்டு வந்த நிர்வாகிகள் எஸ்.பி .தங்கதுரை நேரில் சந்தித்து புதன்கிழமை மனு அளித்தனர்.
அதில் அவர்கள் கூறி இருப்பதாவது: அரச்சலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் ஒருவர் அரச்சலூர் சுற்றுவட்டாரப் பகுதியில் வாகனத் தணிக்கை என்ற பெயரில் பொதுமக்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் விவசாய விளை பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களையும் சோதனை என்ற பெயரில் வழி மறித்து ஏதாவது விதிமீறலைக் காரணம் காட்டி சட்டத்துக்கு அப்பாற்பட்டு பணம் வசூல் செய்து வருகிறார். சட்டப்படியான அபராதம் கட்ட தயார் என வாகன உரிமையாளர்கள் சொன்னாலும் கூட சட்டத்துக்கு உட்பட்டு அதிகபட்ச தொகையை விதிப்பேன் என்று மிரட்டுகிறார். இதன் காரணமாக வாழைத்தார் வாங்கும் வியாபாரிகள் அரச்சலூர் பகுதியில் வாழைத்தார் வெட்டுவது என்றாலே பிரச்னை வரும் என அஞ்சி இந்த பகுதிக்கு வருவதைத் தவிர்த்து வருகின்றனர். இதனால் வாழை விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்கதையாகி வருகிறது எனவே மாவட்ட எஸ்.பி உரிய விசாரணை நடத்தி இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.