01/Jun/2021 11:23:03
ஈரோடு, ஜூன்: ஈரோடு மாவட்டத்தில் வீடுகளின் கண்காணிப்பு குறித்து தினமும் அறிக்கை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தலைமையில், ஈரோடு மாவட்ட கண்காணிப்பு அலுவலர்களான நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையர் செல்வராஜ், கனிமம் மற்றும் சுரங்கத்துறை இயக்குனர் நிர்மல்ராஜ் ஆகியோர் முன்னிலையில், கொரோனா பரவல் தடுப்பு ஆய்வு கூட்டம் நடந்தது.
அறிகுறி கண்டறியப்பட்டால், அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து, 24 மணி நேரத்தில் முடிவு அறிவித்து, முடிவு அடிப்படையில் தேவையான சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இக்கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுவோர், தினமும், 100 வீடுகளுக்கும் சென்று கண்காணிக்க வேண்டும். அவர்கள் சேகரிக்கும் விபரம் தினமும் அனுப்பப்படும்.
கட்டுப்பாட்டு பகுதியில் மக்கள் வெளியே வராத வகையில், கண்காணிக்கப்படுகிறது. அதுபோன்ற நபர்கள் வெளியே வந்து செல்வது கண்டறிந்தால், மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். தவிர, அவர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனை, அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் தேவையான எண்ணிக்கையில், ஆக்சிஜன் இணைப்புடன் கூடிய படுக்கைகள் உயர்த்தப்படுகிறது. பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கினால் மட்டுமே, கட்டுப்படுத்தப்படும் என்றார் ஆட்சியர் கதிரவன்.
மாநகராட்சி ஆணையர் மா. இளங்கோவன், இணை இயக்குனர் ராஜசேகரன், துணை இயக்குனர் சவுண்டம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.