27/Sep/2020 07:03:41
இதுகுறித்து ஈரோடு மாவட்ட சுகாதார துறை பணிகள் இணை இயக்குனர் சவுண்டம்மாள் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தினமும் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா பரவல் அதிகரித்துக் காணப்படுவதால் உயிர் இழப்பும் ஏற்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் யிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் ஐம்பது, அறுபது வயதைக் கடந்த முதியவர் தான். அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளது. ஏற்கெனவே அவர்கள் பல்வேறு நோய்களுக்கு மருந்து எடுத்துக் கொண்டு வருகின்றனர்.இது போன்ற காரணங்களால்தான் உயிரிழப்பு ஏற்பட்டு வருகிறது. உயிர் இழப்பை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, ஈரோடு மாநகர் பகுதியான மூலப்பாளையத்தில் முதியவர்கள் அதிகமாக வசிக்கும் பகுதியாக கண்டறியப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் உள்ள சில வார்டுகளில் 50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் வீடுகளுக்கு சுகாதாரத்துறை பணியாளர்கள் நேரடியாக சென்று அவர்களின் உடல்நிலை காய்ச்சல் சளி உள்ளதா என்பது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர். இது போன்ற பரிசோதனை செய்யும் போது முதியவர்களின் உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பது தெரியவரும். அதற்கு தகுந்தார்போல் அவர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்கப்பட்டு நோய்களிடம் இருந்து அவர்களை காக்க முடியும். பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது மறக்காமல் முக கவசம் அணிந்து வரவேண்டும். இதே போன்று சமூக இடைவெளி மிக மிக முக்கியம். மேலும் அடிக்கடி சோப்பு போட்டு கைகழுவ வேண்டும். இந்த மூன்று முறைகளை முறையாக செய்து வந்தால் வைரஸ் பிடியில் இருந்து நம்மை நாமே காத்துக்கொள்ள முடியும் என்றார் அவர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது பேதமின்றி அனைவரையும் தாக்கி வருகிறது. தாக்கம் அதிகரித்துக் காணப்படுவதால் உயிரிழப்பும் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. நேற்று வரை மாவட்டத்தில் 82 பேர் உயிர் இழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முதியவர்கள் தான். எனவே உயிரிழப்பை கட்டுப்படுத்தும் வகையில் சுகாதாரத் துறையினர் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்