logo
தீயணைப்பு,மீட்புப் பணித்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை

தீயணைப்பு,மீட்புப் பணித்துறை சார்பில் பேரிடர் ஒத்திகை

25/Sep/2020 10:45:41

புதுக்கோட்டை:   வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதையொட்டி மழை மற்றும் வெள்ள பாதிப்பின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் முன்னிலையில்  மாதிரி ஒத்திகைப் பயிற்சி (24.09.2020) நடைபெற்றது.


நிகழ்ச்சியை பார்வையிட்டபின், மாவட்ட வருவாய் அலுவலர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிப்பு ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் சார்பில் மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை  பயிற்சியின் போது  புயல், வெள்ளம், நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்தும் கொள்ளும் வழிமுறைகள் குறித்து விளக்கமளித்தனர். 

மேலும் இப்பயிற்சியில் மழை மற்றும் பேரி்டர் காலங்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகள், தாழ்வான பகுதிகளில் சிக்கித்தவிக்கும் பொதுமக்களை கயிறுகள் கொண்டும், ரப்பபர் படகுகள் மூலம் மீட்பதும், சாலைகள் மற்றும் குடியிருப்பு வீடுகளில் சாய்ந்த மரங்களை மின்ரம்பங்கள் மூலம் அறுத்து மீட்பு பணிகள் செய்வது மேலும் மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்பட்டு மின் அதிர்ச்சியில் மயக்கமுற்ற நபருக்கு முதலுதவி செய்து காப்பாற்றுவது, புகை சூழ்ந்த இடங்களில் மயக்கமுற்ற நபர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகளும் செய்து காண்பிக்கப்பட்டது என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் பானுபிரியா, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணன், பேரிடர் மேலாண்மை தனி வட்டாட்சியர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Top