30/Jan/2021 09:31:03
புதுக்கோட்டை, ஜன: இந்திய பத்திரிகைகள் தினத்தையொட்டி செய்திதாள்களை மக்களின் கரங்களில் கொண்டு சேர்க்கும் செய்திதாள் பணியாளர்கள் முகவர்களுக்கு வாசகர் பேரவை சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
புதுக்கோட்டை வாசகர் பேரவை மற்றும் மரம் நண்பர்கள் இணைந்து இந்திய பத்திரிக்கைகள் தினத்தையொட்டி அதிகாலையில் கண் விழித்து மழை, வெயில், பனி, குளிர் என்று எதையும் பாராமல், உலகச் செய்தி முதல் உள்ளூர் செய்தி வரை வெளியாகும் செய்திதாள்களை மக்களின் இல்லங்களுக்கும் அலுவலகங்களுக்கும் செய்திதாள்களை கொண்டு சேர்க்கும் பணியாளர்கள் மற்றும் முகவர்களை அவர்கள் பணிகளைத் தொடங்கும் இடத்திற்கே வாசகர் பேரவை செயலாளர் பேராசிரியர் எஸ். விஸ்வநாதன் மற்றும் மரம் நண்பர்கள் கண்ணன் கார்த்திக்மெஸ்மூர்த்தி ஆகியோர் நேரில் (புதிய பேருந்து நிலையம் , பிருந்தாவனம்) சென்று சால்வை அணிவித்து கௌரவித்தனர்.
இது குறித்து வாசகர் பேரவைச் செயலர் எஸ். விஸ்வநாதன் கூறுகையில், ஜனவரி 29 இந்திய பத்திரிகைகள் தினம். கடந்த 1780 ஜனவரி 29 -ஆம் தேதி ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்ற ஆங்கிலேயரால், பெங்கால் கெசட் என்ற ஆங்கிலப் பத்திரிக்கை வெளியிடப்பட்டது. இது தான் இந்தியாவில் வெளியான முதல் பத்திரிகை ஆகும். அதனால் இந்த நாள் இந்திய பத்திரிகைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.எங்களை போன்றவர்கள் அன்றாடம் செய்திதாள்களை படித்துதான் பல்வேறு சம்பவங்களை தெரிந்து கொள்கிறோம் செய்தி தாள்களை சைக்கிள்களில் அலைந்து திரிந்து கொண்டு வந்து சேர்க்கும் பணியாளர்களின் உழைப்பு பாராட்டப்பட வேண்டிய விஷயமாகும் என்றார்.