logo
ஐடிபிஎல் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளைக்  கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

ஐடிபிஎல் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்தும் நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகளைக் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

29/Jan/2021 09:55:10

ஈரோடு, ஜன: மத்திய அரசின் பவர்கிரிட் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் இருகூரில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் தேவனகொந்தி வரை 312 கிலோ மீட்டர் தூரம் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விவசாய விளை நிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

இத்திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தும் சாலையோரமாக கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தி ஐடிபிஐ திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டமைப் பின் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரச்ச லூர் அருகே உள்ள அட்டவணை அனுமன்பள்ளி பகுதியில் ஐடிபிஎல் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு நிலத்தின் உரிமையாளரிடம் நோட்டீஸ் வழங்க அரச்சலூர்  வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்  ஆகியோர் சென்றனர்.

 இதனையறிந்த அப்பகுதி விவசாயிகள், மொடக்குறிச்சி வட்டாட்சியர்  அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற கூட்டத்தில் அரசின் மறு உத்தரவு வரும்வரை நிலம் கையகப்படுத்த கூடாது, பணிகள் நடத்தக்கூடாது என ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த ஒப்பந்தத்தை மீறி விவசாயிகளின் நிலங்களை கையகப்படுத்த வருவதை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இதனையடுத்து நோட்டீஸ் வழங்க வந்த அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐடிபிஎல் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கி.வெ. பொன்னையன் உள்ளிட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். 


Top