logo
102 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை தயார் நிலையில் வருவாய் துறையினர்

102 அடியை நெருங்கும் பவானிசாகர் அணை தயார் நிலையில் வருவாய் துறையினர்

23/Sep/2020 08:53:49

ஈரோடு: கேரள மாநிலம் மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கனமழை பெய்து வருவதால் கோவை மாவட்டம், பில்லூர் அணை நிரம்பியுள்ளது. இதனால் பில்லூர் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது இந்த உபரி நீர் பவானி ஆற்றின் வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வருகிறது. பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவு 105 அடியாகும். ஆனால் வ அணையின் பாதுகாப்பு கருதி 102 அடி தொட்டவுடன்  அணையில் இருந்து உபரி நீர் திறக்க வேண்டும். தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதியில் பரவலாக மழை பெய்து வருவதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பவானிசாகர் அணை 100 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் பவானிசாகர் அணை 101 அடியை எட்டியது. இந்நிலையில் இன்று பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் வரத்து சற்று குறைந்துள்ளது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி பவானிசாகர் அணை 101.76  அடியாக உள்ளது.அணைக்கு 6,654 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 750 கன அடியும், கீழ்பவானி வாய்க்காலுக்கு 2300 கன அடியும் என மொத்தம் 3050 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. 102 அடியை பவானிசாகர் அணை நெருங்கி வருவதால் எந்த நேரத்திலும் உபரி நீர் திறக்கப்படும் என்ற காரணத்தால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.வருவாய்த்துறை அதிகாரிகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதுபோல் தீயணைப்பு படை வீரர்களும் ரப்பர் படகுகளுடன் தயார் நிலையில் உள்ளனர். 

Top