logo
தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்குத் தடுப்பூசி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்குத் தடுப்பூசி: அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

03/Jan/2021 09:08:23

கோவை: தமிழகத்தில் முதல்கட்டமாக 6 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.


கோவை மாவட்டத்தில் 5 இடங்களில் கரோனா தடுப்பூசி வழங்கும் ஒத்திகை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி வழங்கும் ஒத்திகை முகாமை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துப் பேசியதாவது: 


கரோனா தடுப்பூசி வழங்குவது மிகவும் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டிய விஷயம். இதனால் தான் தமிழகத்தில் கோவை உள்பட 5 மாவட்டங்களில் 17 இடங்களில் சிறப்பு ஒத்திகை முகாம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்கட்டமாக தமிழகம் முழுவதும் 6 லட்சம் சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 3 கட்டங்களாகக் காத்திருப்பு, தடுப்பூசி வழங்கல், கண்காணிப்பு என்ற முறையில் தடுப்பூசி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

 

கோவை விழாவின் தொடக்கமாக ஹெலிகாப்டர் மூலம் இ.எஸ்.ஐ. மருத்துவமனை சுகாதாரப் பணியாளர்கள் மீது மலர்கள் தூவப்படுகிறது. இதற்காக 21 ஆயிரத்து 200 தலைமை செவிலியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 47 ஆயிரத்து 200 தடுப்பூசி வழங்கும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 2.5 கோடி தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் குளிர்சாதன அறைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

நிகழ்ச்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியர் கு.ராசாமணி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை முதல்வர் ஏ.நிர்மலா, அரசு மருத்துவமனை முதல்வர் (பொறுப்பு) பொ.காளிதாஸ், சுகாதார துணை இயக்குநர் ஜி.ரமேஷ்குமார், இணை இயக்குநர் கிருஷ்ணா உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக இ.எஸ்.ஐ. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கோவை விழாவை சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.


Top