logo
தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு:  தேர்தல் கமிஷன் குழு  சென்னை வருகை

தமிழக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு: தேர்தல் கமிஷன் குழு சென்னை வருகை

21/Dec/2020 06:51:34

சென்னை, டிச: தமிழக சட்டசபையின் பதவி காலம் வருகிற மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையட்டி வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபைக்கு பொதுத் தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.

தமிழக தேர்தலுடன் புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி விட்டது. இதற்காக 2021-ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. 18 வயது நிரம்பியவர்களை புதிதாக வாக்காளர் பட்டி யலில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வருகிற ஜனவரி மாதம் 5-ஆம் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.

இவை தவிர ஒவ்வொரு மாநிலத்துக்கும் தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரங்களை தயார் செய்வது, கூடுதல் வாக்குச்சாவடிகளை உருவாக்குவது உள்ளிட்ட பணிகளிலும் தேர்தல் ஆணையம் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது கொரோனா காலமாக உள்ளதால் சமூக இடைவெளியை கடை பிடிக்கும் வகையில் வாக்காளர்களுக்கு நோய் தொற்று ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு வழிமுறைகளுடன் தேர்தலை நடத்த வேண்டி உள்ளதால் அதற்கேற்ப கூடுதலாக வாக்கு சாவடிகளை உருவாக்குவது பற்றியும் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது.

தேர்தலுக்கு இன்னும் 4 மாதமே உள்ளதால் தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது 2 கட்டமாக நடத்துவதா  என்பது குறித்தும் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய உள்ளது. இதற்காக பொதுத்தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்பட 5 மாநிலத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்று ஆலோசனை நடத்த உள்ளனர். அப்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளிடம் கருத்து கேட்க உள்ளனர்.

5 மாநிலங்களில் நிலவும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டு தேர்தலுக்கு எவ்வளவு போலீஸ் பாதுகாப்பு தேவைப்படும் என்பது பற்றியும் அந்தந்த மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளிடம் விரிவாக ஆலோசனை நடத்த உள்ளனர்.இதற்காக 5 மாநிலத்துக்கும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள்  செல்கிறார்கள்.

அதன்படி இந்திய தேர்தல் ஆணைய பொதுச் செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று தமிழகம் வருகிறது. துணை தேர்தல் கமிஷனர்கள் சுதீப்ஜெயின், ஆசிஸ்குந்த்ரா, பீகார் தலைமை தேர்தல் அதிகாரி எச்.ஆர்.சீனிவாசா, தேர்தல் ஆணைய இயக்குனர் பங்கஜ் ஸ்ரீவத்சவா, தேர்தல் கமிஷன் செயலாளர் மலையாய் மாலிக் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் அனைவரும் தில்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்கள். அவர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விமான நிலையம் சென்று வரவேற்கிறார்.பின்னர் இந்த குழுவினர் கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு செல்கிறார்கள். அங்கு பகல் 12 மணியளவில் அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளை அழைத்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் தேர்தலை ஒரே கட்டமாக நடத்தலாமா அல்லது 2 கட்டமாக நடத்தலாமா என்பது பற்றி ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளிடமும் தனித்தனியாக கருத்து கேட்கிறார்கள்.

அப்போது ஒவ்வொரு கட்சி பிரதிநிதிகளும் கொடுக்கும் மனுக்களையும் பெற்று கொள்கிறார்கள். அதன் பிறகு தேர்தல் ஆணைய அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிர்களுடன்  ஆலோசனை நடத்துகிறார்கள். வருமான வரித்துறை அதிகாரிகளுட னும் ஆலோசனை நடை பெறுகிறது.

இந்த கூட்டம் முடிந்ததும் நாளை தமிழக அரசின் உயர் அதிகாரிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இந்த கூட்டத்தில் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் உள்துறை செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர், உளவுப் பிரிவு அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.தமிழகத்தில் தேர்தல் நடத்த என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் தேர்தல் அதிகாரிகள் விளக்கி கூற உள்ளனர்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள்:

பொது பிரச்சினைகள், தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதிக்கிறார்கள்.அதன் பிறகு நிருபர்களை சந்தித்து பேட்டியளிக்கிறார்கள். அப்போது தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக பேச உள்ளனர். அதன் பிறகு டெல்லி செல்கிறார்கள். இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்து தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளதால் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இதற்கான ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வருகிறார்.


Top