logo
சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம்: ட்விட்டர் டிரெண்டிங்

சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம்: ட்விட்டர் டிரெண்டிங்

06/Dec/2020 02:30:51

சட்டமேதை அம்பேத்கரின் நினைவு தினத்தை ஒட்டி அவரது கருத்துகள் மற்றும் அவரது கொள்கைகளை சமூக வலைதளங்களில் ஏராளமானோர் பகிர்ந்து வருகின்றனர்.

பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் 1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 14-ஆம் தேதி பிறந்தார். இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும், உயர் கல்வி பெறுவதற்காக அமெரிக்கா சென்ற முதல் இந்தியரும் இவர்தான்.

 தாழ்த்தப்பட்ட மக்களுக்கென கழகம் ஒன்றைத் தொடங்கியவர். பரோடா மன்னருடன் இணைந்து தீண்டாமை ஒழியப் போராடியவர். பொருளாதாரம், அரசியல், வரலாறு, தத்துவம், சட்டம் ஆகிய துறைகளில் தேர்ந்தவர். ஆசிரியராகவும், இதழாளராகவும், எழுத்தாளராகவும் சமூகநீதிப் புரட்சியாளராகவும் விளங்கியவர். திராவிட புத்தம் என்ற பெயரில் பல ஆயிரக்கணக்கான தாழ்த்தப்பட்டவர் எனப்பட்ட தலித் மக்களை புத்தசமயத்தைத் தழுவச்செய்தவர்; இவை யாவற்றுக்கும் மேலாக இந்திய அரசியலமைப்புச் சாசனத்தை வரைவதற்கான குழுவின் தலைவராகவும் பொறுப்பேற்றவர்.

1948-இல் இருந்து அம்பேத்கர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக உட்கொண்ட மருந்துகளாலும் கண்பார்வை குறைந்ததாலும். 1954-ஆம் ஆண்டு ஜுன் முதல் அக்டோபர் வரை படுக்கையில் கழிக்க நேர்ந்தது. அதிகரித்த கசப்பூட்டும் அரசியல் நிகழ்வுகளால் இவரின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்டது. 1955-ஆம் ஆண்டில் இவர் உடல்நலம் மேலும் மோசமடைந்தது. புத்தரும் அவரின் தம்மாவும் என்ற புத்தகத்தை எழுதிய 3 நாட்களுக்கு பிறகு 1956 டிசம்பர் 6-இல் டெல்லியிலுள்ள இவர் வீட்டில் தூக்கத்தில் உயிர் பிரிந்தது.

இந்நிலையில், இன்று அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ஏராளமானோர், அவரின் கொள்கை, கருத்துக்கள் மற்றும் அவரின் குணாதிசயங்களை பகிந்து வருவதால், அவரது நினைவு நாள் காலை முதலே ட்ரெண்டிங் ஆக இருந்து வருகிறது

Top